Sunday, September 30, 2012

இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜ் மீண்டும் வெற்றி!


சென்னை: தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக யுவராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்ய வாக்கு எண்ணிக்கை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்கள் சத்திய மூர்த்திபவன் வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொருளாளர் லிஜூ முடிவுகளை அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், யுவராஜ் 6,557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3,657 வாக்குகள் பெற்ற விஜய் இளஞ்செழியன் துணை தலைவராகவும், 2,119 வாக்குகள் பெற்ற நாசே ஆர்.ராஜேஷ் மாநில பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றி பெற்ற யுவராஜூக்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் மாநில தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்ற யுவராஜ் கூறுகையில், எனக்கு வாக்களித்த தொண்டர்களுக்கும், எனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.